|
வேலூர் புரட்சி
|
“எந்த யூலை மாதம் 10-ம் திகதி வேலூர் கோட்டையில் இரத்தவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோ, எப்போது 800 தமிழ் மறவர்கள் பிணமாக கிடந்தார்களோ அந்தநாள் இந்நாள். தமிழ் வீரர்கள் 200 –ற்கும் மேற்பட்ட வெள்ளையர்களை வேட்டையாடிய நாள் யூலை 10–ம் திகதி. இந்த சிப்பாய் புரட்சி முடிந்து 200 ஆண்டுகள் ஓடிவிட்டது” இவ்வாறு வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்ற 200 ஆவது ஆண்டை நினைவுகூர்ந்து நடத்தப்பட்ட தபால்தலையை வெளியிட்டு தமிழகமுதல்வர் கருணாநிதி அவர்கள் தெரிவித்தார்.
நினைவுத் தபால்தலை வெளியிடும் நிகழ்வில் தமிழகமுதல்வர் அவரது மேலதிக உரையில்:
அன்றைக்கு நம் வீரர்கள் தோல்வி அடைவதற்கு காரணம் அவர்களுக்கு சிறந்த தலைமை இல்லாததுதான் என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். இந்த கருத்தை ஏற்க நான் தயாராக இல்லை. மதுரை, நெல்லை, சிவகங்கை மாவட்டங்களிலும் வெள்ளையருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.
இருந்தும் ஏன் தமிழர்கள் தோற்றார்கள்? இடையிலே துரோகிகளும் இருந்ததால்தான் தோற்றார்கள். கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன் இருந்தான். அவன் கட்டப்பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லையா?
இப்படி நம் மன்னர்கள் படைபலம் கொண்டவர்களாக இருந்தாலும் வெற்றி பெறாததற்கு காரணம் கூடவே உடன்பிறந்தே கொல்லும் வியாதி போல துரோகிகளால்தான் தோற்கநேரிட்டது. வெற்றிபெறமுடியாமல் போனது.
இந்தியாவின் முதல் விடுதலைப்போருக்கு வித்திட்டதே வேலூர் சிப்பாய் புரட்சி என்பதை வரலாறு ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்கால தலைமுறையினருக்கு இந்திய சுதந்திரத்தில் தமிழனின் பங்கு என்ன என்பதை உணர்த்தவேண்டும். வேலூர் சிப்பாய் புரட்சி ஒரு திருப்புமுனையாக, முதல் போராட்டமாக இருந்தது என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் வேலூர் நினைவுச்சின்னம் இருக்கும். எனினும் மேலும் ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்படும்.
அத்துடன் சிப்பாய் புரட்சியை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பாடபுத்தகங்களிலும் அவை உள்ளடக்கப்படும். அது மாணவர்களுடைய உள்ளத்தில் வீரத்தை ஊட்டுவதாக அமையும்.
மேற்கண்டவாறு தமிழக முதல்வர் கருணாநிதி தனது உரையில் கூறினார்.
தமிழக வரலாற்றின் போராட்ட கதாநாயகர்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது மறக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்டம் என்பது தனியே அண்ணல் காந்தியால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சை ரீதியான போராட்டங்களால் தான் வழிநாடாத்தப்பட்டதான கருத்துருவாக்கம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசின் நேற்றைய நிகழ்வானது அப்போராட்ட தியாகிகளுக்கு சிறியளவாவது கெளரவத்தை கொடுத்திருக்கும்.
மாவீரன் பூலித்தேவன் வாழ்ந்த இல்லம் வேலூர் சிப்பாய் புரட்சி நடைபெறுவதற்கு முன்னரும் கூட ஆங்கிலேயருக்கு எதிராக பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. இந்திய சுதந்திர வரலாற்றில் “வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலாக 1755 ஆம் ஆண்டில் வீரமுழக்கமிட்டவன் மாவீரன் பூலித்தேவன். 1755 ஆம் ஆண்டு கேணல் எரோன் தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் அன்னியன் எவனுக்கும் வரி வசூலிக்கும் உரிமை கிடையாது என வீரமுழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றவன். அவரது நினைவாக திருநெல்வேலி சிவகிரி மாவட்டத்தில் உள்ள நெல்கட்டும் செவல் எனும் இடத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக பேணப்பட்டு வருகிறது.
மேலதிக தரவுகளுக்கான இணைப்புக்கள்:
1. தமிழ்நாடு இணையதளம்
2. விக்கிபீடியா
3. பிபிசி தமிழோசை ஒலித்தொகுப்பு
4. வேலூர் சிப்பாய் கலகம் பற்றி தினகரனில் வெளியான கட்டுரையை சகவலைப்பதிவர் சிவபாலன் அவர்கள் இணைத்திருக்கிறார். அக்கட்டுரை வேலூர் சிப்பாய் கலகம் தோற்கடிக்கடிக்கப்பட்டதற்கான காரணத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் வேலூர் சம்பவம் நடைபெற்று ஏறத்தாள 150 ஆண்டுகள் இந்தியநாடு சுதந்திரத்துக்காக பயணிக்கவேண்டியிருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அப்பதிவுக்கு இங்கு செல்லவும்.
5. இந்தியாவின் முதலாவது சுதந்திரப்போர் எனும் தலைப்பில் கரிகாலனின் பதிவு
|
|
|
|