<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
பதிவு பற்றி

விடுதலைக்காக குருதி சொட்டும் தமிழர்களின் உணர்வுகளை சொல்லும் ஒருவனின் பதிவும் பகிர்வும்.
  thamillvaanan@gmail.com
 
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
மாததொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

வாழ்க பல்லாண்டு!
இன்று தமிழீழ விடுதலைப்போராட்ட தலைவரின் பிறந்தநாள். அவரைப்பற்றி ஜே.டிக்ஸிற், முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் இப்படி சொல்கிறார்: "ஈழத்தமிழர்களின் நலன்களை பிரதிபலிக்கும் விடுதலைப்புலிகளின் அரசியல் இராணுவ வலிமையும் அதன் பிரதான பாத்திரமும் எவ்வாறு உருவானது. அதற்கான முதலாவது காரணி, பிரபாகரனின் தனிப்பட்ட பண்புகளும், அவரது தனித்திறமையும், உளப்பூர்வமாக ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்துக்கான முழுமையான அர்ப்பணிப்பும் ஆகும். பிரபாகரன் எப்படியெல்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பிரபாகரன் தன்னகத்தே தீர்க்கதரிசனமும் அர்ப்பணிப்புள்ளவராகவும் இருப்பதையும் அவர் இயற்கையாகவே இராணுவ தந்திரோபாய அறிவை கொண்டவராகவும் இருக்கிறார் என்பதை மறுக்கமுடியாது. தற்கால அரசியல்நிலைமைகளை கூர்ந்து மதிப்பிடுவதுடன் அதற்கேற்றவாறு சாமர்த்தியமாக செயற்படுவதிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்".



தமிழீழ அரசை நோக்கிய பயணத்தில் அவரது வழிகாட்டல்கள் பற்றி என்மனத்தில் எழுந்த சில உணர்வலைகளை பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம். ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பை கட்டியமைத்து அதனை தொடர்ச்சியாக கட்டுக்கோப்பாக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் பேணிவருவது என்பது வியப்புக்குரியதே. அவரது இராணுவ புலமைகளுக்கு அப்பால் அவரின் ஒருபார்வை பற்றிய பகிர்வே இதுவாகும்.



இன்று தமிழீழகாவல்துறை என்ற பெயரில் தமது நிர்வாக நடைமுறை அரசுக்கான காவல்துறையை நிறுவி 15 ஆண்டுகள் ஆகின்றது என நம்புகிறேன். பிரபாகரன் இராணுவரீதியாக மட்டுமே சிந்திப்பவர் என இப்போதும் கூறுவோரும் இருக்கிறார்கள். ஆனால் இங்கே ஒருகணம் இது பற்றி சிந்தியுங்கள். இந்திய அல்லது சிறிலங்கா காவல்துறையின் சீருடையை எடுத்துபாருங்கள். ஈழத்தமிழர்கள் இரண்டு காவல்துறையை பற்றித்தான் அறிந்திருந்தார்கள். ஒன்று சிறிலங்கா காவல்துறை. மற்றயது இந்திய காவல்துறை, அதனை சினிமா படங்களில் பார்த்திருப்பார்கள். அவ்வாறான சூழ்நிலையில் தமிழீழத்துக்கு என தனியான காவல்துறை அமைக்கப்பட்டபோது தங்களுடைய காவல்துறையும் எப்படி இருக்கும் என எண்ணியிருப்பார்கள்?. அதே வகையான காக்கிச்சட்டையை போலத்தான் தமிழீழ காவல்துறையும் அணியும் என எதிர்பார்த்திருப்பார்கள்.

ஆனால் தலைவர் பிரபாகரன், எங்களுடைய மக்களுக்கு பொலிஸ் காக்கிச்சட்டைகளை பார்த்தாலே பயம் வரும். எமது மக்கள் சிறிலங்கா காவல்துறையின் கொடுமைகளை நன்கு அறிந்தவர்கள். அதனால்தான் எமது காவல்துறை மக்களுக்கு நண்பனாக அவர்களுக்கு சேவை செய்பவர்களாக இருக்கவேண்டும். மக்களிடையே காவல்துறை என்றால் நம்பிக்கை வைக்ககூடியவர்களாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் பயப்பீதியை உருவாக்கும் பச்சை காக்கிச்சட்டைக்கு பதிலாக நீல உடை சீருடைகளை நடைமுறைப்படுத்தியதாக கூறுகிறார். இராணுவ சிந்தனைகளிலே மட்டுமே அக்கறை கொள்ளும் ஒருவரால் இவ்வாறு மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு கொண்டு அதற்கேற்ப புதிய நடைமுறைகளை நடைமுறைப்படுத்தும் பாங்கை காணமுடியுமா?

ஒரு தலைவன் என்பவன் நிகழ்கால யதார்த்தத்தை கவனத்தில் கொண்டு எதிர்காலநடைமுறைகளுக்கும் ஏற்றவாறு தலைமைதாங்கி வழிநடாத்துபவனாக இருக்கவேண்டும். அதேவேளை தன்னுடைய கொள்கையில் நேர்மையானவனாக இருக்கவேண்டும். அத்தகைய பண்புகளை ஒருங்கே கொண்டவராக பிரபாகரன் விளங்குகிறார்.

படஉதவி tamilnation.org
நினைவுச்சின்னம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியானது எப்போதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தினோடு இறுக்கமான பங்களிப்பை கொண்டதாக இருக்கிறது. தொடர்ந்து கொண்டிருக்கின்ற விடுதலைப் போராட்டத்தில் அப்போராட்டம் இதுவரை அடைந்த இலக்குகளுக்கு வலுச்சேர்க்ககூடியவகையில் யாழ் பல்கலைக்கழகம் செயற்பட்டு இருக்கிறது. சர்வதேச சமூகத்துக்கு தமிழரின் போராட்டத்தை வெளிப்படுத்துவதற்கு யாழ் பலகலைக்கழக சமூகத்தால் தொடங்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வு உதவியது . அதனையிட்டு யாழ்பல்கலைக்கழக சமூகம் பெருமைகொள்கிறது" என யாழ்பல்கலைக்கழக துணைவேந்தர் மோகனதாஸ், மாவீரர்களுக்கான நினைவுசின்னத்தை திறந்துவைத்து உரையாற்றும்போது தெரிவித்தார்.



சிறிலங்கா படைகளால் யாழ்நகரம் 1995 இல் படையெடுப்புக்குள்ளாக்கப்பட்டபோது மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் புல்டோசரால் இராணுவத்தினரால் உழுது அழிக்கப்பட்டன.அப்போது கோப்பாய் மாவீரர்துயிலும் இல்லத்;தில் மட்டும் 900 க்கும் மேற்பட்ட கல்லறைகள் இருந்தன. "இத்தகைய இழிசெயலை செய்த இராணுவத்தை யாழ்மக்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்" என அவர் மேலும் கூறினார்.



கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் புல்டோசரால் அழிக்கப்பட்ட பின்னர் அப்பகுதிக்கு மக்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 1999 ஆம் ஆண்டு மாவீரர் தினத்துக்கு எப்படியாவது நினைவுச்சுடர் ஏற்றவேண்டும் என்பதற்காக சென்று, நினைவுச்சுடரை ஏற்றி திரும்பிவரும்போது மேஜர் ரஜீவன் உட்பட இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.



தற்போது மக்களால் மீளக்கட்டியெழுப்பப்பட்ட துயிலும் இல்லம்

தகவல் மற்றும் படங்கள் tamilnet
கார்த்திகை 27
எங்கே... எங்கே... ஒருகணம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.


தமிழீழ தேசவிடுதலைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய எழுச்சி நாள் நவம்பர் 27. தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக தங்கள் இன்னுயிர்களை ஈய்ந்தவர்களுக்காக ஒருகணம் அவர்களை அஞ்சலிப்போம்.

போராட்டம்பற்றியும், விடுதலைபற்றியும், அதன் கடுமையான பயணங்கள் பற்றியும் பெரும்பாலானோர் அறிந்திருக்காத காலகட்டத்தில் 1976 இல் பொன் சிவகுமாரன் முதலாவது மாவீரனானான். எதிரியின் சுற்றிவளைப்பின்போது காயமடைந்த நிலையிலும் தான் எதிரியின் கையில் உயிரோடு பிடிபடகூடாதென்பதற்காக சயனைற் உட்கொண்டு தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் முதல் மாவீரனானான். அன்று தொடங்கிய மீள்எழுகையின் வீரவரலாறு இன்றும் தொடர்கிறது.



இராணுவத்தின் சுற்றிவளைப்பில் காயமடைந்து பின்னர் தமிழகத்தில் மருத்துவசிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும்போது, வீரமரணமடைந்த சங்கர் தமிழீழவிடுதலைப்புலிகளின் முதலாவது மாவீரனானான். மாவீரன் சங்கர் தனது இறுதிமணித்துளிகளில் கூட தம்பி தம்பி என தன்தலைவனை அழைத்தவாறே வீரச்சாவடைகிறான்.

விடுதலைப்போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் எதிர்பாராதவிதமாக சிறிலங்கா படைகளால் கைதுசெய்யப்படுகிறார்கள். சிறிலங்காவின் நீதிமன்றத்தில் அவர்களுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர்களிடம், உங்கள் இறுதிஆசை எதுவென கேட்டார்கள். எனது இரண்டு கண்களையும் ஒரு தமிழனுக்கு தானமாக கொடுக்கவேண்டும். அந்த கண்கள் ஊடாக மலரும் தமிழீழதாயகத்தை என் கண்களால் காணவேண்டும் என கேட்டார். ஆனால் பின்னர் அதே சிறைச்சாலையில் அவரை வெட்டி கொலைசெய்து, அவரது கண்களை தோண்டிவெளியே எடுத்து இதோ தமிழீழம் பார் என காடையர்கள் எள்ளிநகையாடியதை எண்ணிப்பார்க்கிறோம்.

ஒரு கைக்குண்டு தவறுதலாக வெடிக்கும்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில செக்கன்களில் அது வெடித்துவிடப்போகிறது. அப்படி வெடிக்கின்றபோது தன் சக போராளிகள் பலரை இழக்கவேண்டிய நிலை. உடனடியாகவே தனது சக போராளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அன்பு என்ற போராளி அவ்வெடிகுண்டை தனது வயிற்றோடு வைத்தவாறே குப்புறப்படுத்து வெடித்து மாவீரனாகிறான்.

விரல்விட்டு எண்ணக்கூடிய போராளிகளை கொண்ட காலப்பகுதி. இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் சீலன் காயமடைகிறார். இனி தப்பியோடமுடியாத நிலை. தனது நண்பனிடம் துப்பாக்கியை கொடுத்து தன்னை சுட்டுப்போட்டு தப்பியோடுமாறு சீலன் கட்டளையிடுகிறான்.

இராணுவத்தினர் எப்படியாவது முன்னேறிவிடவேண்டும் என்றநிலையில், இழந்துவிட்ட இராணுவ வலிமையை மீளப்பெற்றுக்கொள்ளும் முகமாக அக்கினிச்சுவாலை என்ற பெயரில் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பெண்போராளிகளால் பாதுகாக்கப்பட்ட பகுதியை நோக்கி இராணுவத்தினர் முன்னேறி கொண்டிருந்தார்கள். இன்னும் குறிப்பிட்ட நேரத்தில் அப்பெண்போராளிகளின் நிலைகள் கைப்பற்றகூடிய சூழ்நிலை. அக்களமுனையை செல்வி வழிநடாத்திகொண்டிருந்தார். இராணுவத்தினர் செல்வியின் நிலையை நெருங்கிவிட்டநிலையில் ஆட்லறிகளால் கூட பாதுகாப்பு அளிக்கமுடியாத நிலை. இக்கட்டான சூழ்நிலையில் செல்வி உறுதியாக முடிவெடுத்தாள். தன்னுடைய நிலைகளுக்கே ஆட்லறிகளால் தாக்கும்படி கட்டளை பிறப்பித்து சண்டை செய்து வீரச்சாவடைந்தார்.

தாம் இறக்கும்நிலை ஏற்பட்டபோது தன்னால் தனது மக்கள் இராணுவத்தினரால் கண்டுகொள்ளபடக்கூடாதென்பதற்காக தனது முகத்துக்கு கைக்குண்டை வெடிக்கவைத்து வீரமரணமடைந்த முகம்தெரியாத மறவர்களை எண்ணிபார்க்கிறோம். வன்னிதேசம் இராணுவத்தினரால் ஆக்கிரமிப்புக்குட்பட்டபோது எல்லைப்படை வீரர்களாக இணைந்து வீரகாவியமான குடும்பத்தலைவர்களை எண்ணிப்பார்க்கிறோம்.

இப்படி எத்தளை போராளிகளை இழந்திருக்கிறோம். இன்றுவரை 17000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் தமிழினவிடுதலைக்காக விதையாகியிருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து ஒருகணம் அஞ்சலிப்போம்.
ஏழு சக மூன்று சமன் ஏழு
எப்படியோ ஒருவாறாக சிறிலங்காவுக்கான சனாதிபதி தெரிவுசெய்யப்பட்டுவிட்டார். வரலாறுகள் புதிதாக எழுதப்படுகின்றன. வெளிப்படையான பார்வைக்கு நல்ல மனிதராக தெரியும் ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டுஇருக்கிறரர். தமிழ் மக்களுக்கான உரிமைகளை தரமாட்டார் என கருதப்பட்ட மகிந்த ராஜபக்ச தமிழர்களின் மறைமுக ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்.

சிறிலங்காவின் அரச தலைவராக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் தமிழீழ விடுதலைப்புலிகளே தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கிறார்கள் என்பதில் தற்போது பதவியேற்கவிருக்கும் மகிந்த ராஜபக்சவிற்கு கூட கருத்துவேறுபாடு இருக்காது. தற்போது மகிந்த ராஜபக்சவிடம் "நீங்கள் சனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்தையிட்டு யாருக்கு முதலில் நன்றி செலுத்துவீர்கள்" என கேட்டால் பதில் நிச்சயமாக புலிகளுக்கு என்பதாகவே இருக்கும்.

சுமார் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகளை மேலதிகமாக பெற்றே மகிந்த தனது வெற்றியை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார். அதேவேளை சுமார் 07 லட்சம் வாக்குகளை கொண்ட யாழ்ப்பாணத்தில் சுமார் 700 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் தவிர இலங்கையின் வடகிழக்கு தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் தேர்தல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்கள் வாக்களிக்கவேண்டும் என தீர்மானத்திருந்தால் ரணிலுக்கே நிச்சயம் வாக்களித்திருப்பார்கள். தமிழர்கள் தேர்தலை புறக்கணித்ததன் மூலம் கடும்போக்காளரான மகிந்த வென்றிருக்கிறார்.

தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றை வெளிப்படையாகவே எதிர்க்கும் மகிந்த ராஜபக்சவின் தெரிவில் தமிழர் தரப்பின் "பங்களிப்பு" சரியானதா? தமிழர் தரப்பு தேர்தலை புறக்கணித்ததன் மூலம் மகிந்த ராஜபக்ச தெரிவாவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது சரியானதுதானா?

பிரேமதாசா அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என சொன்னபோது தமிழர்கள் அவருக்கு வாக்களித்தனர். அதற்கு பின்னர் வந்த சந்திரிகா சமாதான தேவதையாக வாக்கு கேட்டபோது தமிழர்கள் சந்திரிகாவுக்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த அனைவரும் தமிழரருக்கான தீர்வை முன்வைப்பதற்கு பதிலாக யுத்தத்தை மேற்கொண்டனர்.

அவ்வாறான சூழ்நிலையில் ரணிலை மீண்டும ஒருமுறை நம்பமுடியுமா? அல்லது தமிழர்களுக்கு அவர் தனது தீர்வுத்திட்டத்தை முன்வைத்தாரா? ரணில்விக்கிரமசிங்க தமிழர்களின் எந்த பிரதிநிதிகளுடனும் தமது கொள்கை திட்டம் தொடர்பாககோ அல்லது தமது சமாதான திட்டம் தொடர்பாகவோ எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கவில்லை. விரும்பியோ விரும்பாமலோ இலங்கைத்தீவின் அசைவியக்கத்தின் ஒரு பங்குதாரர்கள் என்ற அடிப்படையில் முடிபுகளை எடுக்கும்போது விடுதலைப்புலிகளுடன் நிச்சயம் கலந்துரையாடியிருக்கவேண்டும். அவர்களுடைய கருத்துக்களை பெற்றிருக்கவேண்டும்.

தமிழர்களுக்கு நல்லவராக காட்டிக்கொண்ட ரணில் இதனை செய்யாதது தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதில் வியப்பில்லை. அது மட்டுமல்லாது தமது ஆட்சி காலத்தில் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல்களை மூழ்கடித்தவர்கள் தாங்களே எனவும் சர்வதேச பாதுகாப்பு பொறிக்குள் விடுதலைப்புலிகளை வீழ்த்திவிட்டதாகவும் மார்தட்டியபோது அதற்கான பதிலை தமிழர் தரப்பு "இப்போதைய நிலையில்" வேறு எவ்வாறு வழங்கமுடியும்?

இவற்றுக்கு அப்பால், சாதாரணமான சுனாமி நிவாரண சபைக்கான அதிகாரத்தை வழங்குவதற்கே சிறிலங்கா சட்டங்கள் தடுக்கின்றபோது தமிழருக்கான நிரந்தர தீர்வை அவை வழங்குமா என்பதும் அதற்கான தலைவரை தெரிவு செய்வதற்கு தமிழர்கள் தமது வாக்குகளை அளிக்கவேண்டுமா என்பதும் சிந்திக்கப்படவேண்டிய விடயங்களே.
காசிஆனந்தன் சிறப்புபேட்டி
`உலகின் எந்த மூலையில் இருந்தாலும் விடுதலையிலிருந்து என் உணர்வு விலகாது'

`எத்தனை வருட காலங்களாக என்னால் ஈழத்துக்கு வர முடியாமல், வர விடாமல் தடுப்புகள் போடப்பட்டாலும், என்னுடைய எழுதுகோல் ஈழத்தைப் பதிவு செய்வதை எவர் வந்தாலும் தடுக்க முடியாது'

உலகம் முழுவதிலும் பரவிய தமிழன் எங்காவது ஓரிடத்தில் தமிழனாக நிலைத்தானா?' என்று நியாயமாகவே கேட்கிறார் கவிஞர் காசி ஆனந்தன். 50,000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த தமிழைப் புறந்தள்ளி,-1,500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆங்கிலத்தோடு ஒன்றிப் போகிற தமிழர்கள் இவருடைய கவனத்துக்குள் அதிகமாக இருக்கிறார்கள். மட்டக்களப்பில் பிறந்து வளர்ந்த நமது கவிஞர் இன்று தவிர்க்க முடியாமல் தமிழ்நாட்டில் இருக்கிறார்.

தனது மொழிமீது கொண்டுள்ள தீராப் பற்றுதலால், பிறமொழிகளெதுவும் வந்துகலந்துவிடக் கூடாதென்று கருத்துரைக்கின்றார். இதுவரை கலந்து விட்டவைகளைக் களைந்து கொள்வதற்கு தனது படைப்புகளில் அவர் தருகின்ற விளக்கங்கள் கனதியானவை. 2004 இல் அவர் வெளியிட்ட `தமிழனா..... தமிங்கிலனா?' என்ற நூலில் தமிழ்நாட்டுப் படைப்பாளிகளின் மொழிக் கலப்பை முறையாக விமர்சித்திருப்பதுடன் தமிழ் மொழியின் முரண்பாட்டாளர்களையும் முடிந்தவரை சாடியிருக்கிறார்.

`எத்தனை வருட காலங்களாக என்னால் ஈழத்துக்கு வரமுடியாமல்; வர விடாமல் தடுப்புகள் நேர்ந்தாலும் என்னுடைய எழுதுகோல் ஈழத்தைப் பதிவு செய்வதை எவர் வந்து தடுக்க முடியும்? என்கிற மிடுக்கான கேள்வி அவருடைய விழிகளில் எப்போதுமே மிதந்து கொண்டிருக்கிறது. நிறையவே எழுதுகிறார்.

எங்கும் இருக்கிற தமிழர்களுக்காக அவரால் எங்கிருந்தும் எழுத முடியும்! தமிழ்நாட்டின் மேடைகள் பல கவிஞர் காசி ஆனந்தன் வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருப்பதால் ஓய்வுக்கும் அவருக்குமான நெருக்கம் மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆனாலும், முயன்று கிடைத்த அவருடனான ஒருமணிநேர சந்திப்பில் தயாரான இப்பேட்டி நமது வாசகர்களுக்குக் கிட்டிய வாய்ப்பே!

இங்குள்ள கவிஞர்களின் மனோநிலையை ஈழத்துக் கவிஞர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருப்பீர்கள். முடிவு சொல்லுங்கள்?

இங்கு உவமை தேடாமல் உண்மையை எழுதுபவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். நம்மவர்கள் ஈழத்தில் எங்காவது நடந்துபோகும்போது செவ்வரத்தம் பூவைப் பார்த்தால் அதில் போராளியின் குருதியைப் பார்க்கிறார்கள். அதுவே உண்மையான இலக்கியமும் கூட! ஆனால், குருதியில் செவ்வரத்தம் பூவைப் பார்ப்பது இலக்கியம் அல்ல. இங்கு அப்படித்தான் அதிகம் பேர் எழுதுகிறார்கள். வர்ணனை அதிகமாக இருக்கிறது. இதில் எனக்கு உடன்பாடில்லை.

உங்களுடைய எழுதுகோல் இங்கே சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழல் இருக்கிறதா?

எந்தச் சூழலும் என்னுடைய எழுதுகோலைக் கட்டுப்படுத்தாது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் என்னுடைய உணர்வு ஈழத்தின் விடுதலையிலிருந்து விலகி ஓடாது. சில விடயங்களை நான் எழுதக்கூடாது என்கிற நிலை இருந்தாலும்கூட, எழுதக்கூடிய வகையில் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

சூழல்கள் தடுக்கிற கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு எழுத என்னால் முடியும்! (குரலில் மிகுந்த உறுதி தெரிகிறது) நேற்றைய, இன்றைய ஈழப் போராட்டத்தின் நாளைய நிலைமை என்ன?

வெற்றிதான்! எப்பொழுதும் அறமே வெல்லும் என்று நான் நம்புகின்றேன். தமிழ் இனத்தை முற்றாக அழித்தொழிப்பது என்கிற சிங்கள இனவெறிக் கோலம் அறத்துக்கு முரணானது.அறத்தையே கொலை செய்வது, அறத்துக்கு குழி பறிப்பது. அறத்துக்கு எதிரான இனவெறி எக்காலத்திலும் வெல்லாது. இறுதியான வெற்றி அவர்களிடம் போய்ச் சேராது என்பது உறுதி!

இன்னொரு விடயம், இதுவரையில் 18,000 பேர் களத்தில் போராடி மடிந்திருக்கிறார்கள். ஒரு போராட்டத்தை வளர்த்து வெற்றியின் விளிம்புக்குக் கொண்டு வந்து விட்டு மடிந்தார்கள். இவ்விரண்டு காரணங்களும் வெற்றி தவிர்க்கப்பட முடியாதது என்பதற்கும் தமிழீழம் மலரும் என்பதற்குமான நம்பிக்கைதான்!

உணர்ச்சிக் கவிஞர் என்று விளிக்கப்பட்டவர் நீங்கள். இது....(இடைமறிக்கிறார்)

உணர்ச்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. என்றோ ஒருநாள் ஆதித்தனார் ஐயா என்னை அப்படி அழைத்தார். அது அவர் என்மீது கொண்டுள்ள பாசத்தின் வெளிப்பாடு. என்னுடைய பெயருக்கு முன்பாக இதை நான் போட்டுக் கொள்வதில்லை.

ஆனால், தமிழ்நாட்டில் இது தாராளமாக இருக்கிறதே!

ஆம். வேந்தர், அரசர், பேரரசர், கோ, கவிக்கோ என்றெல்லாம் பல முன்னொட்டுகள். தமிழன் அடிமையாக வாழ்கிற காலத்தில் இவன் அரசு என்றும் வேந்தன் என்றும் பெயருக்கு முன் பின்னாகப் போட்டுக் கொண்டு அரசை இழந்து நொண்டியாக நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கிறான். என்னைப் பொறுத்தவரையில், பாவை எழுதுகிறோம். அவற்றை நம்முடைய மண்ணுக்காகவும் மொழிக்காகவும் படைத்துவிட்டுப் போக வேண்டியதுதான்.

ஈழம், மக்கள், விடுதலை - இவற்றுக்காகவே உங்களுடைய எழுதுகோல் இயங்கும் என்பது போன்றதொரு அடையாளத்தை - உணர்வை வெகு இயல்பாக ஏற்படுத்தியிருந்த நீங்கள் இன்று அங்கில்லை. இது குறித்த உங்களுடைய உளப் போக்கு எப்படி இருக்கிறது?

தூரங்களால் என்னுடைய உணர்வுகளை இல்லாமல் செய்ய முடியாது. நான் எங்கிருந்தாலும் என்னுடைய சிந்தனை ஈழத்தினின்று அகலாது. களத்தில் நிற்கிற வீரர்களின் ஈகம், தற்கொடை- உயிரிழப்பு இவற்றுக்கு ஈடாக நம்மால் எதையும் கொடுக்க முடியவில்லை என்கிற இயலாமை என்னைக் கடுமையாகத் துன்புறுத்துகிறது.

நமது மண்ணின் விடுதலைக்காக நம்மால் ஆன பணியை நம்முடைய ஆற்றலுக்கேற்ப செய்ய முடிந்ததைச் செய்யாமல் யாருமே மடிந்து விடக்கூடாது என்பதே எனது எண்ணம்!

போராட்டத்திற்காகத் தன்னை அர்ப்பணிக்கிற ஒரு எழுதுகோலாளனுக்குச் சமமாக யாரைக் கொண்டாட முடியும்?

போராளிக்கு உணவளிக்கிற எவரையும் கொண்டாட முடியும். ஒரு இலக்கியகாரனுக்குச் சமமாக உணவளித்த தாய் ஆகிவிடுகிறாள். இதுவெல்லாம் வரலாற்றின் மிகப் பெரும் பகுதியும் பதிவுமாகும்.

போராளிகளுக்கு; போராட்டத்துக்கு உணவு கொடுத்து உதவுகிற எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்கிறீர்கள். `இதைச் செய்த நாங்கள் அவர்களால் தூக்கி எறியப்பட்டோம்' என்ற கருத்தை இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி.....!


முஸ்லிம்கள் நேற்றைப் போலவே இன்றும் நாளையும் கூட தம்மை இப்போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், தமிழீழத்தில் இருக்கிற முஸ்லிம்கள் அரபு நாட்டிலிருந்து வந்தவர்களல்ல அல்லது இஸ்லாம் மதத்தில் பிறந்து வளர்ந்து உருவானவர்களுமல்ல.
இவர்கள் தமிழீழத்தில் தமிழர்களாகப் பிறந்து, தமிழர்களாக வளர்ந்து, இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால்தான் இன்றும்கூட மட்டக்களப்பில் உள்ளவர்களிடம் `நீங்கள் யார்' என்று கேட்டால் `நாங்கள் இஸ்லாம் ஆனவங்க' என்று தான் சொல்வார்கள்.

அவர்கள் நம்முடைய பழைய தமிழர்கள். ஆனால், அவர்களிடையே தேசிய உணர்வைவிட; மத உணர்வுதான் காலங்காலமாக ஊட்டி வளர்க்கப்படுகிறது. நீங்கள் பழைய தமிழர்கள் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை.

அவர்களிடம் மிகவும் பணிவாக நான் ஒரேயொரு எடுத்துக் காட்டினைக் கூற விரும்புகிறேன். நாம் இன்றுவரையில் போற்றி மதிக்கத் தகுந்த இஸ்லாமியர்கள் குர்திஸ்தானில் இருக்கிறார்கள். ஈரான், ஈராக், துருக்கி ஆகிய நாடுகளின் எல்லைகளில் குர்திஸ் மக்கள் வாழ்கிறார்கள். ஈரானில் வாழ்கிற இஸ்லாமியர்கள் தனியொரு தேசிய இனம். அவர்கள் பாரசீக மொழி பேசுகிற பாரசீக தேசிய இனம். ஈராக்கில் வாழ்பவர்கள் அரபு மொழி பேசுகிற அரேபிய தேசிய இனம். துருக்கி எல்லையில் இருப்பவர்கள் துருக்கி மொழி பேசுகிற துருக்கிய தேசிய இனம். ஆனாலும், இம்மூன்று தேசிய இனத்தினரும் இஸ்லாம் மதத்தவர்கள். இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு இம்மூன்று நாடுகளின் எல்லைகளிலும் இருக்கிற குர்திஸ் மக்கள் குர்திஸ் மொழி பேசுகிற குர்திஸ் தேசிய இனம். ஆனால், இவர்கள் இஸ்லாம் மதத்தையே பின்பற்றுகிறார்கள்.

துருக்கியையும் ஈரானையும் ஒருபுறம் விட்டு, ஈராக்கை எடுத்துக் கொண்டால், அங்கு உள்ளே வாழ்கிற இஸ்லாமியர்கள் அரபு மொழி பேசுகிறார்கள். எல்லையில் வாழ்கிற இஸ்லாமியர்கள் குர்திஸ் மொழி பேசுகிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்ன?

குர்திஸ் மக்களுடைய மதத்தைத் தோற்றுவித்த மிகப் பெருந்தலைவர் - முஹமது நபி அவர்கள். இவருடைய தாய்மொழி அரபு மொழி. அரேபியர்களுக்குப் பக்கத்திலேயே வாழ்ந்தாலும்கூட குர்திஸ் மக்கள் அரபுமொழி பேசவில்லை. தம்முடைய மதத்தைத் தோற்றுவித்து வழிகாட்டிய நபி பெருமானுடைய தாய்மொழியும் திருக்குர்ஆன் எழுதப்பட்டுள்ள மொழியுமான அரபு மொழியை குர்திஸ் மக்கள் பின்பற்றவேயில்லை.
தம்முடைய இனத்தைவிட, மொழியைவிட, மதம்தான் உயர்வானது என்று குர்திஸ் இனம் நினைத்திருந்தால்; தம்முடைய புனித நூலான திருக்குர் ஆன் எழுதப்பட்டுள்ள மொழியை ஏற்றுக்கொண்டு அரபு மக்களுடைய மொழியைப் பேசி அவர்களுடனேயே இரண்டறக் கலந்து வாழ்ந்திருக்க முடியும். ஆனால், குர்திஸ்கள் தமது தேசிய இனத் தன்மையையும் மொழியையும் மதத்துக்காக விட்டுக் கொடுக்கவில்லை.

ஆனாலும், அல்லாஹ்வையோ, நபிகளையோ,குர் ஆனையோ குர்திஸ்கள் மறந்துவிடவில்லை. தம்முடைய உயிரிலும் மேலானது தமது மொழி என்று களத்தில் நின்று இன்றுவரை போராடி வருகிறார்கள். அவர்களுடைய உணர்வுக்கு நான் தலை வணங்குகின்றேன். இந்த தேசிய உணர்வு ஈழத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

`ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாகவே நாம் தமிழீழத்திலிருந்து விரட்டப்பட்டோம்' என்று இன்றுவரை கூறிக் கொண்டிருக்கிற முஸ்லிம்கள் உங்களுடைய இக்கருத்தோடு முரண்பட மாட்டார்களா?

போராட்ட களங்களில் சில நேரங்களில் ஏதாவது சறுக்கல்கள், தவறுகள் ஏற்படுவதுண்டு. மிகப் பெரியளவிலான இழப்புகளுக்கு மத்தியில் ஒரு இனம் நிமிர முற்படுகின்றபோது சில குறைபாடுகள் நேர்வதைத் தவிர்க்க முடிவதில்லை. வரலாற்றில் அவற்றையெல்லாம் நாம் திருத்திக் கொண்டு மேல் நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே என் கருத்து.

தவிரவும், ஈழத்து முஸ்லிம் மக்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இவர்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்த போராட்டங்களுக்கு முழு அளவில் தமது பங்களிப்பெதனையும் செய்யவில்லை.

கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட போராட்ட காலத்தில் 18,000 விடுதலைப் போராளிகள் தமிழினத்தின் விடுதலைக்காகக் குருதி சிந்தியிருக்கிறார்கள். அக்காலத்தில் முஸ்லிம்கள் தங்களுடைய மக்களின் சொந்த நல்வாழ்வுக்காகத் தம்மால் முடிந்த பணிகளைச் செய்தார்கள். அது இஸ்லாமிய மக்களுக்காகச் செய்தார்கள் என்கிற அளவோடுதான்!
ஆனால், விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த இஸ்லாமியர்களல்லாத தமிழர்களுடைய அர்ப்பணிப்பில் இஸ்லாமிய மக்களுக்கான பாதுகாப்பும் அடங்கியிருந்தது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு, அறப் போராட்ட நிலைமை எப்படி இருந்தது?

அக்கால அரசியல் சூழ்நிலைகளின்போது அறப்போராட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்வதில் பல சிரமங்கள் இருந்தன. அறப்போராட்டம் முழுமை பெறுவதற்கு அரும்பணி செய்தவரான தந்தை செல்வாவின் காலத்தில்தான் அதற்குச் சரியான தளம் அமைக்கப்பட்டது. ஆனாலும், அவர் போராட்டத்துக்கான முன்னெடுப்புகளைத் திட்டமிட்டு எடுத்தார் என்று கூற முடியாது. ஏனெனில், அவருடைய உடல் நிலை அப்படி இருந்தது. இருப்பினும் தந்தை செல்வாவின் முன்னெடுப்பு நடவடிக்கைகளால்தான் தமிழ் மக்கள் விழிப்புணர்வூட்டப்பட்டார்கள்.

தமிழினத்தை அழிப்பதையே நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய இனவெறி பிடித்ததாகவே இலங்கையில் சிங்கள இனம் இருக்கிறது என்பதை தந்தை செல்வா சரியாக இனங்கண்டார். அதனால் அவர் என்ன செய்தார் என்றால், `இலங்கை முழுவதும் ஒரு தேசியம்' என்கிற எண்ணம் இருக்கக் கூடாது. அது வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதனால் தமிழீழப் பகுதியில் எந்தக் காலத்திலுமே முழு இலங்கையும் ஒரு தேசம் என்று ஏற்றுக் கொள்கிற ஒரு அரசியல் கட்சி காலூன்ற முடியவில்லை. இலங்கை அரசியல்வாதிகள் `இலங்கை ஒரு தேசம்' (Srilanka is a nation) என்று சொல்கிறார்கள். ஆனால், தந்தை செல்வாவோ, `Srilanka is a Country Comprising of two nations' என்றார்.

அதாவது, இலங்கை இரண்டு தேசங்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை அவர் உறுதி செய்தார். இது தந்தை செல்வாவினாலான நல்லதோர் தொடக்கம். இத்தொடக்கத்தினாலேயே பின்னாளில் மிகப் பெரிய விடுதலைப் போரை ஆரம்பித்து, வளர்த்து, வெற்றி நோக்கிச் செல்ல முடிந்தது.

இவ்விரண்டு போராட்ட காலப் பதிவுகளும் இலங்கைப் படைப்புகளில் மிகச் சரியாகவும் தவறாமலும் இடம்பெற்றுள்ளனவா?

இதில் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. கொழும்பு வட்டம், தமிழீழ வட்டம் என்றிரு பிரிவுகள் எங்களுடைய இலக்கியங்களில் அறப்போராட்ட காலத்திலிருந்தே நிலையாக இருக்கின்றன. கொழும்பிலேயே வாழ வேண்டிய சூழல் இருந்ததால், ஆட்சியிலுள்ளவர்களைப் பகைக்காமல் கொழும்பு வட்ட இலக்கியப் படைப்புகள் வெளிவந்தன. சிங்கள வெறியர்கள் வீடு புகுந்து ஆட்களை வெட்டிப் புதைக்கிற அக்காலத்தில் அவர்களுக்குப் பயந்தே இலக்கியம் செய்ய வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் அறப்போராட்ட காலத்திலேயே இருந்தது.

இதனுடைய விளைவுதான்; கைலாசபதி போன்றவர்கள் (அவர்களைக் குறை சொல்வதாகக் கருத வேண்டாம்) சிங்கள ஆட்சியாளர்களோடு இணைந்து செயற்பட வேண்டியிருந்தது. அறப்போராட்டத்தை; அதை நடத்தியவர்களைச் சிங்களவர்களோடு இணைத்துக் கிண்டல் செய்த தமிழ்ப் படைப்பாளிகளும் கொழும்பில் இருந்தார்கள். ஆனால், இவற்றையெல்லாம் மீறி, தமிழீழத்திலிருந்து நாம் எம்மால் முடிந்ததை எழுதினோம். எம்முடைய அந்த எழுத்துகள் மிகவும் பிற்போக்கானவை என்கிற விமர்சனங்களும் கொழும்பிலிருந்து வந்து குவிந்தன. எமது இலக்கியம் வகுப்புவாத இலக்கியம் என்றார்கள்.

நாங்கள் பேசுவதெல்லாம் குறுகிய நோக்கம் கொண்டதென்று எழுதினார்கள். ஆனாலும், எம்முடைய கால்கள் மண் விடுதலையைத் தேடியே அடியெடுத்து வைக்கிறதென்று திடமாகப் புரிந்து கொண்டோம்.

எங்களுக்குச் சரியென்று பட்டவற்றையெல்லாம் தெளிவாகவே எடுத்து வைத்தோம். விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாம் முன்பு எழுதியவைகளே விதைகளாகவும் வேர்களாகவும் இருந்தன. இதனுடைய வளர்ச்சியாகவே இன்று களத்தில் நின்றுகொண்டு இலக்கியம் படைக்கிறார்கள். அவர்களுடைய இந்தச் சுதந்திரம் இன்றும்கூட கொழும்பு சார்ந்த சூழலிலும் அரசு கட்டுப்பாட்டுப் பகுதியிலும் உள்ள படைப்பாளிகளுக்கு இல்லை. இவர்கள் அஞ்சி அஞ்சியே தமது கருத்தை முன்வைக்கிறார்கள்.

வெளிப்படையாகக் கூறினால், தமிழீழத்தின் களத்திலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வெளியாகிற இலக்கியங்கள் ஆற்றல் மிக்கவையாக வெளிவருகின்றன.

பலஸ்தீனம், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதெல்லாம் எப்படி களங்களிலிருந்து இலக்கியங்கள் உருவாகின்றனவோ அவ்வாறு தம்முடைய போர்க் களங்களிலிருந்தும் இலக்கியங்கள் பிறந்து கொண்டிருக்கின்றன.

இயந்திரத்தனமான வெளிநாட்டு வாழ்க்கைச் சூழலிலிருந்து மிகக் குறைவாகவும்; அச்சம் நிறைந்த கொழும்புச் சூழலிலிருந்து உண்மைகள் மறைக்கப்பட்டனவாகவும் வெளிவருகின்ற ஈழத்து இலக்கியப் படைப்புகளை நோக்குகையில்; தரமான படைப்புகளைத் தொடர்ந்து இழந்து கொண்டிருக்கிறோம் என்று கருதலாமா?

இதற்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் கூற வேண்டியிருக்கிறது. அண்மையில் நமது எஸ்.பொ.இங்கு தமிழகத்தில் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். `21 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கியங்கள் இலங்கையிலிருந்தே வெளிவரும்' என்றார். இதற்குப் பல எதிர்ப்புக் குரல்களும் இங்கு கிளம்பின.

உண்மையில், களத்தில் நின்றுகொண்டு அல்லது களத்தை நினைத்து வெறெங்கிலுமாவது இருந்து எழுதுகின்ற படைப்புகளில் சோர்வு தெரியாது. ஒரு தூய்மை இருக்கும். வேகம் இருக்கும். அதையெல்லாம் எம்முடைய படைப்புகளில் காண்கிறோம்.

இதற்கு மாறாக, ஆம் என்பதற்கான பதில் தான்; படைப்பாற்றல் மிக்கவர்களின் கொழும்பு வட்ட இலக்கியங்களும் படைப்புகளும்! இவை காத்திரத்தன்மை குறைந்தவை. உண்மைகள் மறைக்கப்பட்டவை.
ஆனாலும் கூட, இவையெல்லாவற்றையும் தாண்டி தமிழீழ இலக்கியம் செழிப்பாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது.

`தமிழ்மொழி அழியாது' என்று அழகாக உச்சரிக்கிறார்களே தவிர; `அதை அழிய விடமாட்டோம்' என்பதற்கான சரியான முயற்சிகளில் இங்குள்ள கலைஞர்கள் என்கிற திரை உலகமோ, பெரும்பாலான இலக்கியர்களோ, ஊடகங்களோ இறங்கிச் செயற்படவில்லையே!

தமிழகத்தில் எனக்குச் சுமையாக இருக்கும் விடயம் இதுதான்! நீங்கள் குறிப்பிட்ட இவர்களெல்லாம் தமிழைப் படுகொலை செய்து வேரோடு பிடுங்கி எறிகிறார்கள். வழிகாட்ட வேண்டிய பலர் வியாபாரம் பார்க்கிறார்கள். ஆனாலும், இதை எதிர்த்து சில பேர் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.

மருத்துவர் ராமதாஸ், தொல் திருமாவளவன், மருத்துவர் சேதுராமன் இவர்களோடு உலகமே போற்றுகிற நம்முடைய பழ.நெடுமாறன் எல்லோரும் இணைந்து ஒரு பெரிய தமிழ் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி முன்நடத்தி வருகிறார்கள். இவர்கள் தமிழ்க் காப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனாலும், மக்களிடம் இந்தத் தமிழ்க் காப்பை நேரடியாக எடுத்துச் செல்வதற்கு ஆட்சியிலுள்ள மக்கள் செல்வாக்குள்ள பெருங்கட்சிகள் நினைத்தால் சாதிக்க முடியும். ஆனால், அவர்களிடம் அப்படி ஒரு முயற்சி இருக்கிறதா ஈடுபாடு இருக்கிறதா, அது குறித்த கவலை இருக்கிறதா என்றால் எதுவுமே இல்லையென்றே படுகிறது. அதுதான் கவலை.
கல்வி மொழியாக தமிழ் மொழி ஆக வேண்டியது; தமிழ் மொழி குறித்த பெரிய கட்டாயமாகும். தமிழ்க் காப்புத் தேவையென்றால் தமிழ்நாட்டில், தமிழ் காலத்தாழ்வு இன்றி கல்வி மொழியாக வேண்டும். அதேபோன்று, ஆட்சிமொழியாக அது முழு அளவில் செயற்படவும் வேண்டும்.

நன்றி தினக்குரல்
-பேட்டி அடுத்தவாரமும் தொடரும்-
சிந்திக்க சில செய்திகள்
செய்தி - 1
இலங்கைத்தீவில் நடைமுறையில் இருக்கும் போர்நிறுத்தம் காரணமாக, சிறிலங்கா படைவீரர்களால் அவர்களது மனைவிமார் மீதான, பலாத்கார பாலியல் துன்புறுத்தல்கள் குறைந்துள்ளதாக, Woman In Need என்ற அமைப்பால் நடாத்தப்பட்ட ஆய்வின் புள்ளிவிபரங்கள் கூறுகிறது. போர்க்காலத்தில் ஏற்பட்ட உளச்சிதைவால், அக்காலப்பகுதியில் இவ்வாறான கொடுமையான துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தார்கள் என்றும், அப்போது தினசரி இருபது பெண்கள் தமது கணவர்மாரை பற்றி முறைப்பாடு செய்திருந்ததாகவும் அவ் அமைப்பு கூறுகிறது.

செய்தி - 2




நேற்று 03 - 11 - 2005 இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்துக்கு தற்போதைய சனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றார். யாழ்குடாநாட்டில் ஆக்கிரமித்திருக்கும் 40000 படைவீரர்களின் தபால்மூலமான வாக்குகளை உறுதிப்படுத்துவதே இப்பயணத்தின் நோக்கமாகும்.
அவர் படைவீரர்களை மட்டுமே சந்தித்தார். பொதுமக்கள் எவரையுயும் சந்திக்கவில்லை. ஆனால் இவரது பயணம் பற்றி ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட தலைப்பு: Wickremesinghe campaigns in Sri Lanka's rebel heartland .

செய்தி - 3
2001 ஆம் ஆண்டு இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு The World Factbook என்ற இணையத்தளத்தில் குடித்தொகை புள்ளிவிபரங்களை இணைத்துள்ளார்கள். அதன்படி

சிங்களவர் 73.8%
முஸ்லிம்கள் 7.2%
இந்தியதமிழர் 4.6%
இலங்கைதமிழர் 3 .9%


இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் போர் காரணமாக பல
லட்சக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த நிலையில் நடைபெற்ற சனத்தொகை கணிப்புத்தான் என்றாலும் புள்ளிவிபரங்களை பார்க்கும்போது இது கவலை அளிக்கின்ற விடயமே. ஆனால் இக்கணக்கெடுப்பின்போது தமிழீழதாயகத்தின் புள்ளிவிபரங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பது எத்தனைபேருக்கு தெரிந்திருக்கும்.