<BODY><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9107255\x26blogName\x3d%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://thamilsangamam.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://thamilsangamam.blogspot.com/\x26vt\x3d-4696126665130882971', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>
   
பதிவு பற்றி

விடுதலைக்காக குருதி சொட்டும் தமிழர்களின் உணர்வுகளை சொல்லும் ஒருவனின் பதிவும் பகிர்வும்.
  thamillvaanan@gmail.com
 
எதிரொலி
எதிரொளி
முன்னைய பதிவுகள்
தொகுப்பு
மாததொகுப்பு
உங்கள் வரவுகள்

To see all visitor details
நன்றிகள்

Powered by Blogger
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

தமிழீழதேசியப்பண்
எதிர்வரும் மாவீரர்தினத்திற்கு முன்னதாக தமிழீழதேசியப்பண்ணை உருவாக்கும் அரும்பெரும் முயற்சியில் இணைந்து கொள்ளுமாறு அனைத்து தமிழ்மக்களுக்கும் விடுதலைப்புலிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



ஏற்கனவே தேசியக்கொடியும், தேசிய மலரும் உத்தியோகபூர்வமாக பாவனையில் உள்ள நிலையில் தற்போது தேசியப்பண்ணை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வேண்டுகோள் தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வழி காட்டுதலோடும் நெறிப்படுத்தலோடும் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த விடுதலைப் போராட்டத்தினூடாக ஈழத்தமிழர் தாயகத்தில் ஒரு நடைமுறை அரசு நிறுவப்பட்டுள்ளது.

அதை நிலை நிறுத்துகின்ற வகையில் தேசியக் கொடி, தேசிய மலர் என்பன ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ஆயினும், தேசியப் பண் ஆக்கப்படாத நிலையில், எமது கொடி வணக்கப் பாடலையே தேசியப் பண்ணுக்கு மாற்றாக நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

தேசியப் பண் இன்றைய சூழலில் காலத்தின் இன்றியமையாத் தேவையாகிவிட்டது. எதிர்காலத்தில் மீக்குயர் பண்ணாக ஒலிக்கவிருக்கும் தமிழீழத் தேசியப் பண்ணினை ஆக்கும் அருமுயற்சியில் பங்கேற்குமாறு தாயகத்திலும் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற எமது இனிய தமிழுறவுகளை அன்புடன் அழைக்கின்றோம்.

தேசியப் பண்ணினை ஆக்க முன்வருவோர் தேச விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த மான மறவர்களினது விடுதலை வேட்கைக்கும் தாயகம் பற்றி அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்க்கைக்கும் உயிர்கொடுக்கும் வகையில், துள்ளல் நடையில் மிடுக்கோடு கூடியதாகத் தேசியப் பண்ணினை ஆக்குதல் வேண்டும்.

எமது தாயகத்தின் சிறப்பு, பெருமை, வளம் என்பவற்றை வெளிப்படுத்துகின்ற வகையில் அமைக்கப்படும் தேசியப் பண், ஈழத்தமிழர்களின் விடுதலை வேட்கையையும் அதற்கு எம்மினம் கொடுத்த விலைகளையும் எமது வழித்தோன்றல்களின் நினைவில் நிலை நிறுத்தக் கூடியதாக பிறமொழிக் கலப்பற்றதாக அமைதல் வேண்டும்.

இவ்வாறாக எமது தேசியப்பண் ஆகக்கூடியது பதினெட்டு வரிகளுக்குள் உயர் வீச்சைக் கொண்டதாக அமையவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்களை அனுப்புபவர்கள் தமது முழுப்பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களையும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.

உருவாக்கப்படும் தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்கள் 27.11.2005 ஆம் நாளுக்கு முன்னதாகப் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். தாயகத்தில் உள்ளவர்கள் தத்தம் பிரதேச அரசியல்துறை செயலகங்கள் ஊடாகவும் அனுப்பி வைக்கலாம்.

மின்னஞ்சல்: editorial@viduthalaipulikal.com
தொலைபேசி: +94 21 228 5010
தொலைநகல்: +94 21 228 3941

தகவல் உதவி புதினம்
எழுக தமிழ் படங்கள்
கடந்த திங்கட்கிழமை (24.10.2005) அன்று புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களால் பெல்ஜியம் நாட்டில் உள்ள பிரசெல்ஸ் நகரில் நடைபெற்ற எழுகதமிழ் எழுச்சிநிகழ்வின் சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் படங்களை காண இங்கே செல்லவும்(தமிழ்நாதம்).
















எழுகதமிழ் நிகழ்வு தொடர்பான மேலும் பல விடயங்களை அறிந்து கொள்ளவும் அந்நிகழ்வுக்கான பாடல் ஒன்றை கேட்கவும் இங்கு செல்லவும்.

படஉதவி தமிழ்நாதம்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயண வரவேற்பு மறுப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீளப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் மனு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் பெல்ஜியத்தில் கையளிக்கப்பட்டது.

பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் நகரில் கொட்டும் மழையில் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான புகலிடத் தமிழர்கள் உரிமை முழக்கம் எழுப்பி வருகின்றனர். இந்தப் போராட்டத்தினிடையே தமிழர்கள் உரிமை முழக்கத்தை வலியுறுத்தும் கோரிக்கை மனுவை எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவின் பிரதிநிதிகள் கையளித்தனர்.

பாலஸ்தீன விடுதலைப் பிரகடன காலகட்டத்தில் பாரிய பங்கு பற்றியவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னாள் தலைவரும் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் சர்வதேச சட்டங்கள் துறைப் பேராசிரியருமான பிரான்சிஸ் பாயில், தமிழீழ அமைதிப் பேச்சுக்குழுவில் இடம்பெற்றுள்ள சட்டத்தரணி வி.உருத்திரகுமாரன், சுவீடன் பேராசிரியர் பீற்றர் ஸாக், மலேசிய பேராசிரியர் இராமசாமி, யேர்மனியின் ஆல்பேர்ட் கோல் அடிகளார் ஆகியோர் பிற்பகல் 3.00 மணி அளவில் இந்த மனுவை கையளித்தனர்.

இங்கிலாந்தின் எலிசா மன், டென்மார்க்கின் மகேஸ்வரன், நோர்வேயின் யோகராஜா பாலசிங்கம் ஆகியோரும் பெல்ஜிய முழக்கப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இன்று ஐரோப்பிய நேரம் பிற்பகல் 12 மணியளவில் இந்த உரிமை முழக்கப் போராட்டம் தொடங்கியது.

ஐரோப்பிய ஒன்றியத் தலைமைச் செயலகம் அருகில் இந்த நிகழ்வின் தொடக்கத்தில் பாரம்பரிய நாதஸ்வர இசை வாசிக்கப்பட்டது. பின்னர் பொதுச்சுடரினை தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் ஏற்றி வைத்தார். தமிழீழத் தேசியக் கொடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஏற்றினார்.

நிகழ்வின் தொடக்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் பேசியதாவது:
மாவீரன் நெப்போலியனையும் அலெக்சாண்டரையும் ஒன்றிணைந்த தலைவர் அண்ணன் பிரபாகரன். நம்மை அழிக்க ஒருவார காலத்தில் இந்தப் பொடியன்களை நசுக்கிக் காட்டுகிறோம் என்ற ஆணவத்தோடு கொக்கரித்துக் கொண்டு சிங்கள இராணுவத்துக்கு துணையாக வந்த இந்திய இராணுவத்தை துரத்தியடித்தோம்.

தப்பித்தால் போதும் என்று தப்பி ஓடியது இந்திய இராணுவம். பின்னர் தமிழர்களை நசுக்குவதற்கு அமெரிக்காவின் உதவியை சிறிலங்கா இராணுவம் நாடியது.
அமெரிக்காவின் முக்கிய தளபதிகள் போர்க் களத்தில் சிங்கள இராணுவத்துக்குப் பயிற்சி அளித்தனர். புலிப்படை இப்படித்தான் சிந்திக்கிறது- புலித் தலைவன் இப்படியெல்லாம் உத்தரவிடுகிறார் என்று கூறி பயிற்சி கொடுத்தது.

ஆனால் அமெரிக்க இராணுவத்தளபதிகளே புறமுதுகிட்டு ஓட ஆனையிறவில் வெற்றி பெற்றோம்.
அண்ணன் பிரபாகரன் இராணுவ ரீதியாக எடுத்த ஒவ்வொரு முடிவும் உலகத்தின் கண்களை அகல விரித்து காட்ட வைத்திருக்கிறது. வியப்பில் ஆழ்த்த வைத்திருக்கிறது.
ஒட்டு மொத்தத்திற்குமான தலைவன் பிரபாகரன்- தமிழீழத்துக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் தலைமை தாங்குகிற தலைவர் பிரபாகரன்தான்.

அவரது தலைமையின் கீழ் அவர் வாழுகிற காலத்திலேயே நாம் தமிழீழத்தை வென்றெடுப்போம்!
ஐரோப்பிய ஒன்றியமே! புலிகளின் போக்குவரத்து தடையை நீக்கு!
ஐரோப்பியக் கூட்டரசே! உன் செவிகளுக்கு எட்டுகிறதா? தடையை விலக்கு விலக்கு!!
தமிழர் வீரம் வெல்லும்! அதை காலம் சொல்லும்!!
என்றார் திருமாவளவன்.


இதைத் தொடர்ந்த
எங்கள் மூச்சு தமிழீழமே!
எங்கள் நிலம் தமிழீழமே!
சூரியத் தேவன்! பிரபாகரன்!
தலைவா! நாம் இருக்கிறோம் தலைவா!
ஐரோப்பிய ஒன்றியமே தடையை நீக்கு!!
என்ற முழக்கங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் மீண்டும் எழுப்பப்பட்டன.

பின்னர் ஜேர்மனியின் அல்பேர்ட் கோல் அடிகளார் யேர்மனிய மொழியில் ஆற்றிய உரை:
1983 ஜூலை படுகொலைகளின் போது தமிழ் மக்களை நான் கொழும்பில் பார்த்தேன். ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோது லட்சக்கணக்கில் இடப்பெயர்வுக்காக ஐரோப்பிய நாட்டை நோக்கி அவர்கள் சென்றார்கள். தமிழ் மக்களின் கனவானது தமிழீழம் என்பதை நாம் நன்றாக அறிவோம். மக்கள் பட்ட நாம் கஸ்ரங்களை அறிந்துகொண்டோம்.

2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதனால் தமிழ் மக்களும் நாங்களும் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எல்லோருக்கும் தெரியும் என்ன நடந்தது என்று? சமாதான ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட எதையும் சிறிலங்கா அரசாங்கம் கடை பிடிக்கவில்லை. தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் மிகக் கடுமையாக உள்ளன.

நாங்கள் இங்கிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தோம். ஆனால் எதிர்மாறான சம்பவங்களே நடைபெற்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயண வரவேற்பு மறுப்பானது ஒரு பக்கச் சார்பானது. இலங்கை இனப்பிரச்சனையில் ஐரோப்பிய ஒன்றியம் நடுநிலை வகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த நாம் கூடியுள்ளோம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு இனவாதத்தை வெளிப்படுத்துகிற முடிவு. ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். சுதந்திரமான தமிழீழம் மலருவதை எல்லோரும் எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழர்கள் தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசியத் தலைவரின் படம் மற்றும் தமிழீழச் சின்னங்களை கைகளில் ஏந்தியும் சிவப்பு மஞ்சள் உடை அணிந்தும் பங்கேற்றுள்ளனர். பல்வேறு புகலிடப் பிரதேசங்களிலிருந்தும் 15 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் திரண்டிருப்பது ஐரோப்பியர்களின் கவனத்தை திசை திருப்பியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி: புதினம்
இவரா அவர்!!
தமிழ் சிங்கள உறவுகள் படிப்படியாக சீர்குலைந்துகொண்டிருந்த காலப்பகுதி. 1954 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம், வல்லிபுரம் பார்வதி அவர்களுக்கும் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கும் இளைய மகனாக பிரபாகரன் பிறந்தார். பிரபாகரனின் தாயார் ஆழமான கடவுள் பக்தியுடையவராகவும் தனது இளைய புதல்வனில் அளவு கடந்த பாசம் உடையவராகவும் இருந்தார். பிரபாகரனின் தந்தையார் தனது இரண்டு ஆண்பிள்ளைகளும் இரண்டு பெண்பிள்ளைகளும் மிகவும் நல்ல பண்புகள் உள்ளவர்களாக வளரவேண்டும் என்பதில் கண்டிப்பானவராக இருந்தார்.

பிரபாகரனின் தந்தையார் நிலஅளவையாளராக வேலை செய்து கொண்டிருந்த காரணத்தால் அவருக்கு அடிக்கடி இடமாற்றங்கள் வந்துகொண்டிருக்கும். அதன்காரணமாக அவருக்கு இடமாற்றம் கிடைக்கும்போது "துரை" என அவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட பிரபாகரனும் அவர் செல்லவேண்டிய இடமெல்லாம் செல்லவேண்டியிருந்தது. அவ்வாறு கிழக்கு மாகாணத்துக்கு அவரது தந்தையார் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்காரணமாக, பிரபாகரனின் முதல் இரண்டாண்டு கல்வியை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு நகரத்தில் உள்ள ஒரு பாடசாலையில் கற்றார். பின்னர் மீண்டும் வல்வெட்டித்துறைக்கு இடமாற்றம் கிடைத்தபோது, வல்வெட்டித்துறை சிதம்பராகல்லூரியில் பிரபாகரன் தனது கல்வியை தொடர்ந்தார். பிரபாகரன் தனது ஏழாவது வருட கல்வியை அங்கு நிறைவு செய்தபோது, மீண்டும் அவரது தந்தைக்கு வவுனியாவுக்கு இடமாற்றம் கிடைத்தது. வவுனியாவுக்கு சென்று தனது கல்வியை தொடர்ந்தார். அடிக்கடி இடமாற்றங்களை பெற்று செல்லும்போதும், தனது இளையமகனை தன்னுடனே எப்போதும் கூட்டிச்செல்வார். பாடசாலை நேரம் தவிர்ந்த மற்ற நேரங்களில் மேலதிக கல்வி கற்பிப்பதற்காக பிரத்தியேகமாக ஒரு ஆசிரியரையும் அவர் ஒழுங்கு செய்துவிடுவார்.

சமயவைபவங்களின்போது பிரபாகரன் எப்போதும் சுறுசுறுப்பாக தனது குடும்பத்தினருக்கு உதவிசெய்து கொண்டிருப்பார். அயலவர்களும் உறவினர்களும் கேட்கும் உதவிகளை செய்வதற்கு பிரபாகரன் எப்போதும் ஆர்வத்துடன் இருப்பார். பிரபாகரன், பாட்டானாரின் நினைவு நாட்களின் போது ஆர்வத்துடன் அக்கறையுடனும் ஓடியாடி வேலை செய்துசெய்துகொண்டிருப்பார். அன்றையதினம் வருகைதரமுடியாத உறவினர்களுக்காக பிரபாகரன் உணவுகளை எடுத்துச்செல்வார் என வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர் நினைவு கூருகிறார்.

வல்வெட்டித்துறையானது 10000 ஆயிரம் தமிழர்களை கொண்டதாகவும் ஒரு கத்தோலிக்க தேவாலயத்தையும் மூன்று இந்து ஆலயங்களையும் கொண்டதாகவும் இருந்தது. அவற்றில் ஒரு இந்து ஆலயம் அவர்களது குடும்பத்தினரின் கோவிலாகும். அங்கு நடைபெறும் அனைத்து முக்கிய விழாக்களின்போதும் பிரபாகரன் பங்குபற்றி ஏதாவது உதவிசெய்து கொண்டிருப்பார். பிரபாகரனின் குடும்பத்தவரைப் போலவே பிரபாகரனும் மிகவும் ஆழமான கடவுள் பக்தியுடையவராக இருந்தார். பிரபாகரனின் விருப்பத்துக்குரிய கடவுளாக முருகன் இருந்தார். சிங்கள பேரினவாதக் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தன.

பிரபாகரனின் தந்தையார் அனைவராலும் மதிக்கப்படும் ஒருவராக இருந்தார். அவர் எப்போதும் கூர்மையடைந்துவரும் தமிழ், சிங்கள இன முரண்பாடுகளைப் பற்றி தனது நண்பர்களுடன் விவாதித்துகொண்டிருப்பார். இவ்விவாதங்கள் அனேகமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். பிரபாகரனால் அவற்றை முழுமையாக விளங்கிக் கொள்ளமுடியாவிட்டாலும், பிரபாகரன் எப்போதும் அவ்விவாதங்களின்போது அமைதியாக பிரசன்னமாக இருப்பார். இதன் மூலமாக தமிழ் சிங்கள அரசியல் முரண்பாடுகளை பற்றிய அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. இவ்வாறான பிரபாகரனின் பண்பே தற்போதும் எவருடைய கருத்தையும் பொறுமையாக கேட்டறியும் குணவியல்புக்கு அடிப்படையாக இருக்கலாம்.

அன்றைய காலகட்டத்தில் இந்தியத் தலைவர்கள் மீது அனைத்து ஈழத்தமிழர்களும் மதிப்பும் பற்றும் வைத்திருந்தனர். இந்திய சுதந்திர தினங்களின்போது பத்திரிகைகள் அனைத்தும் ஆர்வத்துடன் இந்தியா பற்றியும் இந்தியத் தலைவர்களைப் பற்றியும் செய்திகளைத் தாங்கிவரும். மகாத்மா காந்தி, நேரு, சுவாமி விவேகானந்தா மற்றும் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோரின் படங்கள் பெரும்பாலான வீடுகளில் தொங்கிக்கொண்டிருக்கும். பிரபாகரன் இரண்டு இந்தியத் தலைவர்களின் வாழ்க்கையால் கவரப்பட்டார். சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் பகத்சிங் ஆகியோரே அவர்கள். சுபாஸ் சந்திரபோசின் சுலோகமான " எனது இறுதி இரத்தத்துளி சிந்தப்படும்வரை நான் எனது மண்ணின் சுதந்திரத்துக்காகப் போராடுவேன்" என்ற வார்தைகள் பிரபாகரனுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. நெபபோலியனின் படையெடுப்புகளைப் பற்றியும், சுவாமி விவேகானந்தரின் போதனைகளையும், மகாபாரதக் கதைகளையும், கிருபானந்தவாரியாரின் சமயச்சொற்பொழிவுகளையும் விரும்பி அறிந்துகொள்ளும் ஒருவராக பிரபாகரன் இருந்தார்.

இதுபற்றிய அரசியல் கூட்டங்கள் நடந்தபோது அவற்றுக்குச் சென்று அப்போதைய நிலைமைகளைப் பிரபாகரன் அறிந்து கொண்டார். அவரது வீட்டிலும் அவரது தந்தையாரும் உறவினர்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடுரங்களை உறுதிப்படுத்துவது போலவே கதைத்தார்கள்.
ஒருநாள் பிரபாகரன் ஒரு செய்தி அறிந்தார். பாணந்துறையில் உள்ள இந்துக்குருக்கள் ஒருவர் சிங்களக் காடையரால் பிடிக்கப்பட்டு மண்ணெண்ணய் ஊற்றி எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தியே அதுவாகும். "நாங்கள் சமய நெறிப்படி வாழ்பவர்கள். சமய நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு உயர்நிலையில் வைத்து மதிக்கப்படவேண்டிய குருக்களையே உயிருடன் தீமூட்டி எரிக்கிறார்கள் என்றால், நாங்கள் ஏன் அவர்களை திருப்பித்தாக்கக்கூடாது?" என பிரபாகரன் கேட்டார்.

எம்.ஆர், நாராயணன் சுவாமி அவர்களால் எழுதப்பட்ட TIGERS OF LANKA என்ற நூலில் இடம் பெற்ற ஒரு சிறு பதிவே இதுவாகும்.
இலங்கை ஒரு வழிகாட்டி
இன்று இலங்கை தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய வழிகாட்டி நூல் ஒன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குச் செல்வோர் அறிந்து கொள்ளக்கூடிய மிகவும் பயன் உள்ள நூல் அது ஒன்றாகவே இருக்கும் என நான் நம்புகிறேன். அப்புத்தகத்தை வாசித்த பின்னர் அவ்வாறான முழுமையான வழிகாட்டிநூல் ஏதாவது சிறிலங்கா அரசாங்கத்தினூடாகப் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறதா? என இணையப்பக்கங்கள் வழி பார்த்தபோது ஏமாற்றம் தான் காத்திருந்தது.

இப்புத்தகம் www.lonelyplanet.com எனப்படும் இணையத்தளத்துக்குரியவர்களால் அனைத்து நாடுகளுக்குமான வழிகாட்டி நூல்களின் வரிசையில் அமைந்ததாகும். தொடர்ச்சியாக மீள்பதிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் இப்புத்தகத்தின் 2002 ஆம் ஆண்டுப் பதிப்பைத்தான் எனக்கு வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் 2003 ஆம் ஆண்டுக்கான பதிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டதை இணையத்தளமூடாக அறியக்கூடியதாகவுள்ளது.இதற்கான எழுத்தாளர்கள் மூவரும் இலங்கைத்தீவின் அனைத்துப்பகுதிகளுக்கும் சென்று இதனை தொகுத்துள்ளமை மிகவும் முக்கியமானதாகும்.

இனி புத்தகத்தின் உள்ளடக்கங்களைப் பார்ப்போம். என்ன நோக்கத்துக்காக இப்புத்தகம் வெளியிடப்படுகிறது என்பதை தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதன் பின்னர் இலங்கையின் வரலாறு விபரிக்கப்படுகிறது. இலங்கையின் பண்டைய தமிழ், சிங்கள அரசர்கள் பற்றியும் பின்னர் போர்த்துக்கேய, ஒல்லாந்த, பிரித்தானிய காலனித்துவம் பற்றியும் குறிப்பிட்டு விடுதலைப்போராட்டத்தின் ஒவ்வொரு கட்டங்களையும் அலசியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பின்னர் இலங்கையில் உள்ள பிரதான நகரங்களைபற்றிய குறிப்புகள் வருகின்றன. உதாரணத்துக்கு யாழ்ப்பாண நகரம் பற்றிய குறிப்புகளைக் குறிப்பிடவிரும்புகிறேன். ஒரு காலத்தில் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக யாழ்ப்பாணம் இருந்ததை இப்புத்தகம் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.அதில் யாழ்ப்பாண அரசர்களின் வரலாற்றைக் குறிப்பிட்டு, அங்குள்ள முக்கியமான ஆலயங்களையும் பிரதான நூல் நிலையத்தையும் அதற்கு நேர்ந்த அவலத்தையும் தொட்டுகாட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து வரும் சிறுதலைப்புகள்: சந்தைகள், தங்ககங்கள்(அதன் விலைப்பட்டியலுடன்), உணவகங்கள், போக்குவரத்துமுறைகள் என நீண்டு செல்கிறது.

அடுத்து யாழ்ப்பாணத்திலுள்ள விடுதலைப்புலிகளின் முக்கியத்துவமான இடங்கள் எவையெனக் குறிப்பிட்டுள்ளார்கள். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் என அழைக்கப்படும் போரில் இறந்த வீரர்களின் கல்லறைகள் சிறிலங்கா இராணுவத்தினரால் சிதைக்கப்பட்டதையும் பின்னர் அவர்கள் அதனை மீளக் கட்டியெழுப்பியுள்ளதையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அவ்விடுதலைப்போராட்டத்தில் முதலில் கரும்புலியாகச் சாவடைந்த மில்லரின் கல்லறை நெல்லியடியில் அமைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டிருப்பது மிகவும் முக்கியமானது. தொடர்ந்து வல்வெட்டித்துறை நகரை பற்றிக் குறிப்பிடும் போது அங்குள்ள அம்மன் கோவிலைப் பார்க்கும்போதே அந்நகரம் எவ்வாறு முன்னர் செழிப்பாக இருந்தது என்பதைக் கற்பனை செய்யமுடியும் என அவ்வெழுத்தாளர் கூறுகிறார். அதை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பம் வழிபடுகின்ற கோவில் என விளிக்கும் அவர்கள், அங்கிருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள பிரபாகரின் வீட்டைப் பார்வையிட அங்கு நிற்பவர்களிடம் விசாரியுங்கள் எனக் கூறுகிறார்கள்.

தொடர்ந்து கிளிநொச்சி, வவுனியா என நீண்டு செல்கிறது. அங்கு இராணுவத்தினதும் விடுதலைப்புலிகளினதும் சோதனை முகாம்கள், விடுதலைப்புலிகளின் வரிவிதிப்பு நடைமுறைகள் அவர்கள் வெளிநாட்டு பயணிகளை அனுசரிக்கும் நடைமுறைகளையும் கூடக் குறிப்பிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்து முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தமிழ், சிங்கள பயன்பாட்டுச் சொற்களும் குறியீடுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக தமிழில்
வெளியே - Exit - veliye
உள்ளே - Enterance - ullay
ஆண்கள் - Man - Aankal
பெண்கள் - Woman - Penkal

இவ்வாறு 'காவல்துறையை அழை', 'வைத்தியசாலை எங்கே?' என்பன போன்ற அவசர, அவசிய சொல்லாடல்களையும் குறிப்பிட்டிருப்பது கவனிக்கவேண்டியது.

சிறிலங்கா அரசாங்கத்தினூடாகவோ அல்லது அதனது பேரினவாத அமைப்புகளுடாகவோ வெளிவிடப்பட்ட எந்த வெளியீடுகளும் இலங்கைத்தீவின் அனைத்து இடங்களையும் ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை என்பதையும், இவ்வாறான கையேடுகள் கூட எமது மக்களைப் பற்றியும் அங்குள்ள சூழ்நிலைகள் பற்றியும் வெளிநாட்டு மக்கள் அறிந்து கொள்ள உறுதுணையாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு அவைபற்றிய விளக்கமான நூல்களை அறிஞர்கள் வெளிவிடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்..
அடுத்தது யார்?
இலங்கைத்தீவில் தொடரப்போகும் அடுத்த ஆறாண்டு நிகழ்ச்சித்திட்டத்தினை சிறிலங்கா அரசதரப்பில் தலைமை ஏற்கப்போவது யார்? சர்வதேச நாடுகளின் ஆதரவையும் இலங்கைத்தீவின் சிறுபான்மை சமூகங்களின் பெருமளவு ஆதரவையும் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவா? அல்லது இலங்கைத்தீவின் பெரும்பான்மை சமூகத்தின் சாதாரண மற்றும் கடும்போக்கு மக்களின் ஆதரவை கொண்ட மகிந்த ராஜபக்சவா? யார் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத்தீவில் அமைதி திரும்பப்போவதில்லை என எண்ணினாலும், ரணில் வந்தால் ஓரளவு சமாதானம் வரும்என்றே தமிழர்கள் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

வெளிப்படையாக தன்னால் செய்யச்கூடியதையே சொல்லக்கூடிய தலைவர் ரணில்தான். எனவே அவர் சொல்வதில் நம்பிக்கை வைக்கமுடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இலங்கை முஸ்லிம் காங்கிரசும் தெரிவிக்கின்றன. தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் விடுதலைப்புலிகளுக்கு இல்லை. ஆனால் தமிழர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ரணிலுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால் இரண்டு தலைவர்களையும் நம்பமுடியாது என்ற கட்டத்திலும் சமாதானத்துக்கான வாக்களிப்பாக, சிங்களதேசத்துக்கு கொடுக்கப்படும் இன்னுமொரு சந்தர்ப்பமாக அது கருதப்படும்.



ஆனால் சிங்கள தேசத்தின் கடும்போக்காளர்கள் என்ன செய்கிறார்கள்? இலங்கைத்தீவை சிங்கள பௌத்தநாடாக்க வேண்டும் என்றும் கொழும்பு நகரத்தில் மட்டும் 1000 புத்தர்சிலைகளை நிறுவவேண்டும் என்றும் தமிழர்களுடன் அதிகாரப்பங்கீடு கூடாது என்றும் கூறும் சிங்கள பௌத்த பிக்குகள் இவர்களையும் இன்று மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரகூட்டத்திற்கு அழைத்து செல்கிறார்கள்.